அந்த டேபிள்...!
சிரிப்புச் சத்தம்.
ஆம் அந்த டேபிள் அதிகம் கண்டது எங்களுடைய சிரிப்புச் சத்தத்தைதான்...
எங்களுடைய கூட்டம் சற்று பெரியது தான் என்றாலும், அந்த டேபிள் எங்களுக்கு போதுமானதாக இருந்தது. அந்த டேபிளுக்கும் எங்களுக்கும் இடையில் ஏதோ ஒரு பந்தம் இருப்பதாகத்தான் நான் எண்ணுகிறேன்...நாங்கள் அந்த டேபிளில் உணவை மட்டும் பரிமாறவில்லை எங்களுடைய பல இன்ப துன்பங்களை பரிமாறியிருக்கிறோம்..அந்த டேபிள் பல குறும்புகளைக் கண்டுள்ளது. ஜெயந்தியின் முட்டை பல முறை ஒழித்து வைக்கப்பட்டுள்ளது.
அந்த அடர் நிற டேபிளில் ரம்யாவின் மஞ்சள் தட்டு அத்தனை பளீரென்று இருக்கும்.
ஈவ்லினின் தக்காளி தொக்குக்கென்று ஒரு கூட்டம் கூடும். சரண்யாவின் பொடி அவ்வளவு வேகமாக காலியாகும். "எங்கிட்ட வம்பு பண்ணாம உன்னால இருக்க முடியாதுல" என்றபடி ஈவ்லின்,
"கேளேன்...இங்க கேளு" என்றவாறு பேசிக்கொண்டே இருக்கும் ஷேரன், எதையாவது சிந்தித்தப்படியே இருக்கும் பூர்ணி, கலகல என அரட்டை அடித்தபடியே ஜென்னி, பெட்ஸி, ஜேஷிபா, 'அந்த' இடத்தில் நான் தான் உட்காருவேன் என முரண்டுபிடித்தபடியே நான்;
குட்டித்தட்டில் சாய்மா உண்ணும் சோற்றை எண்ணி விடலாம், நாங்கள் எல்லாரும் வந்து அமர்ந்த பின் மிக மெதுவாக வரும் ஷமிதா
மற்றும் தோசை தின்று பட்டம் வென்ற தோசை மபிஷா, இதையெல்லாம் அமைதியாக கவனித்தபடியே சாப்பிடும் என் பிரியா ;
ஆகா!!! எத்தனை நல்ல நினைவுகள் ...
பல சோகமான நிகழ்வுகளும் அங்கு பகிரப்பட்டுள்ளது.
முதல் காதல் தொடங்கி பல அழகான நினைவுகளை நாங்கள் பகிர்ந்து கொண்ட இடம் "அந்த டேபிள்".
இன்றும் அந்த டேபிள் அப்படியே தான் இருக்கிறது..ஆனால் நான் மேலே குறிப்பிட்ட ஒரு சிலரை தவிர வேறு யாரும் இப்போது இல்லை. வெவ்வேறு பாதையில் பயணித்துக்கொண்டிருக்கிறார்கள்.
சில நேரங்களில் அந்த பசுமையான நிகழ்வுகளை மீட்டெடுக்கவே அதே டேபிளில் இப்போதும் அமர்வதுண்டு.
வருங்காலத்தில் அந்த இடம், அந்த டேபிள் எத்தகைய மாற்றம் பெறப்போகிறது என தெரியவில்லை.
அப்படியே இருக்கும் பட்சத்தில் எங்களில் யார் அதனை கண்டாலும் ஒரு நிமிடமேனும் அங்கு நின்று சிரித்து விட்டுதான் செல்வோம் என்பது மட்டும் நிதர்சனம்.